அழிஞ்சியாறு வாய்க்காலை தூர்வாரிய விவசாயிகள்
- வாய்க்காலை சூழ்ந்து புதர்கள் மண்டியதால் இந்த வாய்க்கால் வழியே தண்ணீர் எளிதில் வெளியே செல்ல முடியாது நிலை ஏற்பட்டது.
- 40 விவசாயிகள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் நிதியை திரட்டி வாய்க்காலில் மண்டி கிடக்கும் கோரை புற்களை கடந்த மூன்று நாட்களாக அகற்றி வருகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம், பெரம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் செய்துள்ளனர்.
இந்தப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பயிர்களைச் சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது.
பயிர்களை சுற்றி தேங்கியுள்ள மழை நீர் வடிவதற்கு வடிகால் வசதி சரிவர இல்லாததாலும், இந்தப் பகுதிக்கு வடிகாலாக திகழும் அழிஞ்சியாறு சென்ற வருடம் தூர்வாரப்பட்ட நிலையில், மீண்டும் வாய்க்காலை சூழ்ந்து புதர்கள் மண்டியதால் இந்த வாய்க்கால் வழியே தண்ணீர் எளிதில் வெளியே செல்ல முடியாது நிலை ஏற்பட்டது.
சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ள இந்த அழிஞ்சியாறு வாய்க்காலில் தண்ணீர் சீராக சென்று சேர முடியாத அளவுக்கு புல் மற்றும் செடிகள் மண்டி கிடந்தன.
இதனால் தற்போதுள்ள சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட விவசா யிகளே ஒன்றிணைந்து கோரை புற்களை அகற்றி வாய்க்காலை சீரமைக்க முடிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 40 விவசாயிகள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் நிதியை திரட்டி வாய்க்காலில் மண்டி கிடக்கும் கோரை புற்களை கடந்த மூன்று நாட்களாக அகற்றி வருகின்றனர்.
தற்போது விவசாயிகள் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த வாய்க்காலில் மண்டி கிடக்கும் கோரை புற்களை அகற்றி உள்ளனர்.
இந்த வாய்க்காலை தூர் வாரிய செலவினத்தை அதிகாரிகள் வழங்கவும், மேலும் தொடர்ந்து வாய்க்காலை முழுவதுமாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.