உள்ளூர் செய்திகள்

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது

Published On 2022-12-07 09:58 GMT   |   Update On 2022-12-07 09:58 GMT
  • நெய்தீபத்தை ஏந்தியவாறு பிரகாஷ் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
  • மலைக்கோவிலின் ஒரு பகுதியில் தயாராக வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

ஓசூர்,

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதில் உதவி கலெக்டர் சரண்யா, ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மேற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் நாகராஜ் மற்றும் மாநகர கிழக்கு பகுதி தி.மு.க. செயலாளர் ஜி.ராமு உள்பட பலர் கலந்து கொண்டு தீப தரிசனம் செய்தனர்.

முன்னதாக நாதஸ்வர வாத்தியம் முழங்க, நெய்தீபத்தை ஏந்தியவாறு பிரகாஷ் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, மலைக்கோவிலின் ஒரு பகுதியில் தயாராக வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

அப்போது கூடியிருந்த பக்தர்கள் தீபத்தை தரிசித்து, அரோகாரா, அரோகரா சிவனே போற்றி போற்றி என்று பக்தி முழக்கமிட்டனர்.

தொடர்ந்து மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

விழாவையொட்டி மலைக் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் தீபத் திருவிழாவை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு நடத்தினார்கள்.

Tags:    

Similar News