உள்ளூர் செய்திகள்

தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்த வந்த மாற்றுத்திறனாளிகளை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற காட்சி,

தருமபுரியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்- குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர்

Published On 2022-07-05 08:14 GMT   |   Update On 2022-07-05 08:14 GMT
  • எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் இன்று போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தோம்.
  • மாதாந்திர குறைதீர் கூட்டங்கள் மாவட்ட அளவிலும் ஆர்.டி.ஓ. அளவிலும் முறையாக நடத்திட வேண்டும்.

தருமபுரி,

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் இன்று குடியேறும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.

அதன்படி சுமார் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகம் அருகே திரண்டனர். அவர்களை போலீசார் நுழைவுவாயிலுக்கு முன்பாகவே தடுத்து நிறுத்திவிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட வந்த மாற்றுத்திறனாளிகள் கூறுகையில்:-

எங்களது அடிப்படை கோரிக்கைகள் குறித்து ஏற்கனவே கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். மற்ற மாவட்டங்களில் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்பட்டுள்ளன. ஆனால் இங்கு மட்டும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் இன்று போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார். அவர்களது கோரிக்கைகள் பின்வரு மாறு:-

தமிழ்நாடு வருவாய் ஆணையர் உத்தரவுபடி மாதாந்திர குறைதீர் கூட்டங்கள் மாவட்ட அளவிலும் ஆர்.டி.ஓ. அளவிலும் முறையாக நடத்திட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தால் நடத்தப்ப டும் முகாம்களிலேயே அனைத்துவித அடையாள சான்றிதழ்களும், பயண சலுகை சான்றிதழ்களும், உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் ஒருங்கிணைத்து வழங்கிட வேண்டும். பயனாளிகளை அலைக்கழிக்க கூடாது.

மாற்றுத்திறனாளி உதவித்தொகை வருவாய் துறையில் இருந்து மாற்றுத்தி றனாளி அலுவலகத்திற்கு மாற்றும்போது அலுவலக ரீதியான ஆவண மாற்றங்களை நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். உதவித்தொகை ஏ.டி.எம். மூலமாக எடுத்துக்கொள்ள நடவடிக்கை வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் அடையாளச் சான்றிதழ் வழங்கிட ஊனத்தின் சதவீதம் குறிப்பிட உரிய நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும்போது முகவரி மாற்றம் எளிதாக செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தடுத்து நிறுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில நிர்வாகிகள் கரூரான், தமிழ்செல்வி, மாரிமுத்து, நம்புராஜன் உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Tags:    

Similar News