தஞ்சையில், காகித கூழால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரம்
- அரை அடி முதல் 6 அடி வரையிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
- பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர்.
தஞ்சாவூர்:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபடுவது வழக்கம்.
இது தவிர அனைத்து விநாயகர் கோவில்கள், சன்னதிகளில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெறும். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் 10 நாட்களை இருப்பதால் விநாயகர் சிலைகளின் விற்பனையும் மும்முரம் அடைந்துள்ளன.
அதன்படி தஞ்சை வெண்ணாற்றங்கரை ஆனந்த வள்ளியம்மன் கோவில் தெருவில் தாமரை மகளிர் சுய உதவி குழு மூலம் பல வண்ணங்களில் பல வகைகளில் காகித கூழால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது.
அரை அடி முதல் 6 அடி வரையிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர்.
இதுகுறித்து தாமரை மகளிர் சுய உதவி குழு தலைவி பூங்குழலி கூறும் போது:-
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் விநாயகர் சிலையை விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது தொற்றுகுறைந்து இயல்பு நிலை திரும்பி உள்ளதால் இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் விற்பனை நல்லபடியாக நடக்கும் என எதிர்பார்க்கிறோம்.
நாங்கள் கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக விநாயகர் சிலைகளை வாங்குகிறோம்.
விநாயகர் சிலைகள் காகித கூழால் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
அதற்கு நாங்கள் பல வண்ணங்களில் வண்ணம் தீட்டுகிறோம். சிம்ம விநாயகர், அன்னபட்சி விநாயகர், மயில்வாகன விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் விநாயகர் சிலைகள் உள்ளன.
பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
ரூ.100 முதல் ரூ.15 ஆயிரம் வரையிலான விநாயகர் சிலைகள் உள்ளன என்றார்.