உள்ளூர் செய்திகள்

பல்லக்குத்தேரை தோளில் சுமந்தபடி ஆடிப்பாடி ஊர்வலமாக கொண்டு செல்லும் மலைகிராம மக்கள். 

பெலாப்பாடி மலை கிராமத்தில் வெங்கட்டராமர் கோவில் பல்லக்குத் தேர்த்திருவிழா

Published On 2023-02-11 09:09 GMT   |   Update On 2023-02-11 09:09 GMT
  • 300 ஆண்டுகள் பழமையான கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமர் கோவில்கள் அமைந்துள்ளன.
  • அருநூற்றுமலை வாழ் பழங்குடியின மக்கள், இக்கோவில்களில் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி தேர்த்திருவிழா நடத்தி வருகின்றனர்.

வாழப்பாடி:

வாழப்பாடி அருகே பெலாப்பாடி மலை கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் 300 ஆண்டுகள் பழமையான கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமர் கோவில்கள் அமைந்துள்ளன.

அருநூற்றுமலை வாழ் பழங்குடியின மக்கள், இக்கோவில்களில் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி தேர்த்திருவிழா நடத்தி வருகின்றனர். வாழப்பாடி பகுதியில் பிரசித்திப்பெற்ற இந்த விழாவில் மலைவாழ் பழங்குடியின மக்கள் மட்டுமின்றி, வாழப்பாடி, பேளூர் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்தாண்டு தேர்த்திருவிழா ஒரு வார விழாவாக வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. முதலாவதாக கரியராமர் கோவிலிலும், அடுத்தடுத்து வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமர் கோவிலும் சிறப்பு பூஜை வழிபாடுகளுடன், பாரம்பரிய முறைப்படி திருவிழா நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று பிரசித்திப் பெற்ற வெங்கட்டராமர் கோவில் பல்லக்குத் தேர்த்திருவிழா நடைபெற்றது.

இந்தவிழாவில் வெங்கட்டராமர், அண்ணாமலையார், காளியம்மன் உற்சவ மூர்த்திகளை 2 பல்லக்குத் தேர்களில் ரதமேற்றி, பக்தர்கள் தோளில் சுமந்தபடி ஆடிப்பாடி ஊர்வலமாக சென்று வினோத முறையில் தேரோட்டம் நடத்தினர். மாவிளக்கு ஊர்வலம் நடத்திய பெண்கள் 'குலவை' குரலோசை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இத்திருவிழாவில் பங்கேற்ற, ஏறக்குறைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வாழை இலை போட்டு சமபந்தி விருந்து வைத்து பழங்குடியின மக்கள் அன்பை பகிர்ந்து அசத்தினர்.

இதுகுறித்து பேளூர் மணியக்காரர் திருமூர்த்தி, வாழப்பாடி ஒன்றியக்குழு உறுப்பினர் முருகன் கூறுகையில், பெலாப்பாடி மலை உச்சியில் அமைந்துள்ள 3 மலைக்கோவில் திருவிழாவிற்கும் ஆண்டு தோறும் தவறாமல் சென்று வருகிறோம். மலை கிராம மக்கள் குல தெய்வமாக வழிபட்டு வரும் கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமர் சுவாமிகள் மிகுந்த சக்தி வாய்ந்த தெய்வமாக கருதுவதால் பயபக்தியோடு திருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றனர்.

தேர்த்திருவிழாவில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களையும் கோவில் மைதானத்தில் அமரவைத்து வாழை இலை போட்டு பொங்கல் சோறுயும், தானியக்குழம்பும் பரிமாறி, மலை கிராம மக்கள் விருந்தோம்பலையும் அன்பையும் வெளிப்படுத்தி ஆண்டுதோறும் அசத்தி வருவது பாராட்டுக்குரியதாகும் என்றனர்.

Tags:    

Similar News