புதுக்கடை அருகே கோவிலில் விளக்குகள் திருட்டு
- அன்பளிப்பாக வழங்கப்பட்ட 30 விளக்குகளை ஒரு சாக்கு பையில் கட்டி, கோவில் வராந்தாவில் வைத்திருந்தனர்
- மூடையில் இருந்த 2 கிலோ எடையுள்ள 18 விளக்குகளை காணவில்லை. அவற்றை யாரோ மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர்.
கன்னியாகுமரி :
புதுக்கடை அருகே உள்ளஅள்ளம் பகுதியில் ஆதிசக்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிளக்கு பூஜைகள் நடத்துவதற்காக பொதுமக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 30 விளக்குகளை ஒரு சாக்கு பையில் கட்டி, கோவில் வராந்தாவில் வைத்திருந்தனர். நேற்று ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற இருந்ததால் மூடையில் இருந்த விளக்குகளை எடுக்க சென்றனர். அப்போது மூடையில் இருந்த 2 கிலோ எடையுள்ள 18 விளக்குகளை காணவில்லை. அவற்றை யாரோ மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர்.
இது தொடர்பாக கோவில் தலைவர் சுனேஷ் (வயது 43) புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். அப்போது 30 விளக்குகளில் எடை அதிகமாக காணப்பட்ட விளக்குகள் சாக்கு மூடையில் அப்படியே இருந்தன. திருடர்கள் கைவரிசை என்றால் அனைத்து விளக்குகளும் திருட்டு போய் இருக்கும் என்பதால் இது தொடர்பாக சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் செல்லதுரை வழக்கு பதிவு செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் விசாரணை நடத்தி வருகிறார்.