சுசீந்திரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு 108 விநாயகர் சிலைகள் ஊர்வலம்
- அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் நடந்தது.
- முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்பட்டது
கன்னியாகுமரி:
அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக் குட்பட்ட அனைத்து ஊர்களிலும் கடந்த 31-ந்தேதி 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜையில் வைக்கப்பட்டது. இந்த சிலைகள் அனைத்தும் நேற்றுபிற்பகல் 2 மணிக்கு சுசீந்திரத்துக்கு கார், வேன், லாரி, மினி லாரி, டெம்போ, ஜீப், டிரக்கர் போன்ற வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டது.
அதன் பிறகு மாலை 3 மணிக்கு சுசீந்திரம் தாணு மாலய சுவாமி கோவில் முன்பு இருந்து இந்த 108 விநாயகர் சிலைகளும் கன்னியாகுமரிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
ஊர்வலம் வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, பொற்றையடி, மந்தாரம்புதூர், அச்சங்குளம், கொட்டாரம், பெருமாள்புரம், மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம், பழத்தோட்டம் சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு வழியாக மாலை 5.30 மணிக்கு கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரையை சென்றடைந்தது.
108 விநாயகர் சிலைகளுக்கும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் 108 விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.