அருமனை அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
- போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு, போதை பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
- தலா 200 கிராம் கஞ்சா, 2 வாகனங்களிலும் இருந்தது.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில் பலர் கைது செய்யப்பட் டுள்ளனர். போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதையில்லாத குமரி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் போலீ சாருக்கு உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு, போதை பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
அருமனை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார், நேற்று மாலை ஆயவிளை-முல்லையாறு திருப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இரு சக்கர வாகனங்களில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
ஆனால் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது 2 வாகனங்க ளிலும் சீட்டுக்கு அடியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தலா 200 கிராம் கஞ்சா, 2 வாகனங்களிலும் இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, கஞ்சாவை கடத்தி வந்தவர்கள், செறுவல்லூர் ஆயவிளையை சேர்ந்த சலீம்ராஜ் (வயது 24), சிஜூ (20) என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அதே ஊர் வடக்கன் கரையை சேர்ந்த ஷாஜி (38) ஏற்பாட்டின் பேரில், கேரளாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததாக கைதான 2 பேரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார், ஷாஜியை தேடி வருகின்றனர்.