உள்ளூர் செய்திகள்
தக்கலை அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு
- தக்கலை போலீசில் புகார்
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
தக்கலை அருகே உள்ள மிருந்தவிளை பள்ளியாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி ஐடா (வயது 48).
இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராஜ், இறந்து விட்டார். நேற்று ஐடா, தனது மகனுடன் வீட்டில் இருந்தார்.
இரவில் அவர் தூங்கிக் கொண்டிருந்த போது, யாரோ மர்ம நபர் பின்பக்க கதவு வழியாக வீட்டுக்குள்ளே புகுந்து உள்ளார். அவர் ஐடாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஐடா கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர், 2பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஒடிவிட்டான்.
இதுகுறித்து தக்கலை போலீசில், ஐடா புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.