உள்ளூர் செய்திகள்

குளச்சல் விசைப்படகில் சிக்கிய புல்லன் மீன்கள் - வியாபாரிகள் போட்டிப்போட்டு வாங்கி சென்றனர்

Published On 2023-03-11 07:24 GMT   |   Update On 2023-03-11 07:24 GMT
  • விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்
  • 3 தினங்களுக்கு முன்பு மீன் பிடித்து கரை திரும்பிய விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்லவில்லை

கன்னியாகுமரி :

குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000 -க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.

விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும்.

தற்போது விசைப்படகு களில் கணவாய், புல்லன், கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் சீசனாகும்.இந்நிலையில் கடந்த. 3 நாட்களாக குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடந்த 3 தினங்களுக்கு முன்பு மீன் பிடித்து கரை திரும்பிய விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்லவில்லை. ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகளும் பாதியிலேயே கரை திரும்பியது.

அவை நங்கூரம் பாய்ச்சி மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.ஆனால் அருகில் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் பைபர் கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றன.என்றாலும் குறைவான மீன்களே கிடைத்தன.தவிர இன்று காலை கரை திரும்பிய ஒரு சில விசைப்படகுகளில் சிறிய இறால் எனப்படும் புல்லன் மீன்கள் கிடைத்தன. அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர்.இன்று ஒரு கிலோ புல்லன் மீன்கள் தலா ரூ.45 முதல் ரூ.50 வரை விலை போனது. இது வழக்கமான விலைதான் என மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News