லட்சியத்துடன் படித்தால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம் - குளச்சலில் பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் அறிவுரை
- சிறந்த மதிப்பெண்கள் பெற்ற குளச்சல் நகர பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
- போதை பொருள் பழக்கத்திற்கு ஆளானால் எதிர்க்காலம் இருண்டு விடும் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்
கன்னியாகுமரி :
குளச்சல் பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்பான 'ரயின் டிராப்ஸ்' சார்பில் கடந்த 2021- 2022-ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற குளச்சல் நகர பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா குளச்சல் எஸ்.பி.எம்.மண்டபத்தில் நடந்தது.
பர்ஹா மாஸினா இறை வசனம் படித்தார்.முகம்மது இஸ்மாயில் தலைமை வகித்தார்.முகம்மது மஹ்பூப் வரவேற்று பேசினார். நியாஸ்கான் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் விழாவில் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பேசியதாவது:-
மாணவர்கள் பாடங்களை படிக்கும் போது நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் படிக்க வேண்டும்.முடியாது என்கிற அய்யப்பாட்டுடன் படிக்க கூடாது.ஒரு வண்டிக்கு இரண்டு சக்கரங்கள் இருப்பது போல் மாணவர்களுக்கு படிப்பும், விளையாட்டும் முக்கியம். 2 திறமைகளையும் வளர்த்து கொள்ள வேண்டும்.சில மாணவர்களிடம் வேறு திறன் இருக்கும்.அதை அவர்கள் வளர்த்துக்கொண்டு வாழ்வில் முன்னேறலாம்.தோல்வியுறும் மாணவர்கள் மனம் தளரக்கூடாது.
அடுத்து வரும் வாய்ப்புக் களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு எல்லாம் மேலாக மாணவர்கள் நல்ல பண்பு களை, ஒழுக்கத்தை வளர்த்து கொள்ள வேண்டும். பெரியோர்கள், ஆசிரியர் களை மதிக்க வேண் டும்.
போதை பொருள் பழக்கத்திற்கு ஆளானால் எதிர்க்காலம் இருண்டு விடும் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.படிக் கும் பருவத்தில் படிப்பு, விளையாட்டுடன் மறைக் கல்வியும் படித்தால் நல்ல பண்புள்ள மாணவர்கள் உருவாகுவார்கள். வெற்றி இலக்குடன் படித்தால் மாணவர்கள் உயர்ந்த நிலையை அடையலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நகரளவில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் முதலிடம் பிடித்த பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மற்றும் 12 ம் வகுப்பில் மாவட்டளவில் முதல் மதிப்பெண் பெற்ற நாகர்கோவில் பொன் ஜெஸ்லி மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர். நஹ்லாவுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. சாஸ்தான்கரை ஜோசப் மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் ஜெயகர் ஜோசப், ஓரியண்ட் மெட்ரிக், உயர்நிலைப்பள்ளி தாளாளர் பீர்முகம்மது, இலப்பவிளை அரசு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியை ரெஜி, தூய மரியன்னை மேல் நிலைப்பள்ளி தலைமை யாசிரியை புஷ்ப ரனிதா, வி.கே.பி.மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இளங்கோ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.