ஆற்றூர் அருகே கடைக்குள் புகுந்து வெண்கல பாத்திரங்கள் கொள்ளை - தொடர் சம்பவங்களால் வியாபாரிகள் அச்சம்
- சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான பொருட்களை வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறார்.
- சி.சி.டி.வி. காமிரா பதிவில், கொள்ளையர்கள் முகம் தெரியாமலிருக்க அதனை திருப்பி வைத்து சென்றுள்ளனர்
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் ஆற்றூர் அருகே உள்ள கல்லுப்பாலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயன்.
இவர் அந்த பகுதியில் சமையல் பாத்திரங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான பொருட்களை வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறார். இதனால் கடையில் ஏராளமான வெங்கல பாத்திரங்கள் வைத்திருந்தார்.
சம்பவத்தன்று இரவு ஜெயன், கடையை அடைத்துச் சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை அவர் கடைக்கு வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
கடைக்குள் சென்று பார்த்தபோது, பாத்திரங்கள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. சுமார் 60 கிலோ மதிப்பிலான 2 பெரிய வெண்கல வார்ப்புகள், வெண்கல உருளிகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போய் இருப்பதாக போலீசில் ஜெயன் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் திருவட்டார் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டனர். கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவில் மினி டெம்போ வாகனத்தில் வரும் இருவர் அப்பகுதியில் சுற்றி திரிவதும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து கடையின் அருகில் நிற்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடிப்பதும் தெரியவந்தது. எனினும் கொள்ளை நடந்த கடை அருகில் வைக்கபட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவில், கொள்ளையர்கள் முகம் தெரியாமலிருக்க அதனை திருப்பி வைத்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து கைப்பற்ற பட்ட காட்சிகள் அடிப்படை யில் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.
கடந்த சில தினங்களாக ஆற்றூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெண்கல பொருட்களை மட்டுமே குறி வைத்து கொள்ளை சம்பவ ங்களை அரங்கேற்றிவரும் கொள்ளையர்களால் வியாபாரிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.ஆற்றூர் அருகே குட்டைக்குழி கும்பளம் மகாதேவர் கோவிலில் கடந்த 21-ந் தேதி ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வெண்கல மணிகள், விளக்குகள் கொள்ளை யடிக்கபட்டது குறிப்பிடத் தக்கது.
இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு உண்ணாமலைகடை பகுதியில் பாத்திரக்கடை யில் இருந்து வெண்கல பொருட்கள் கொள்ளை போனது. தொடர்ந்து ஆற்றூர், திரு வட்டார் பகுதிகளில் இரவு நேரங்களில் கொள்ளை சம்பவம் தொடர்கிறது.
எனவே போலீசார் இரவு நேரங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.