உள்ளூர் செய்திகள்

ஈத்தாமொழி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

Published On 2022-09-25 07:53 GMT   |   Update On 2022-09-25 07:53 GMT
  • மது வாங்குவதற்காக வரிசையில் நின்றபோது வாக்குவாதம்
  • ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை

கன்னியாகுமரி:

ஈத்தாமொழி அருகே உள்ள தருமபுரத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 50)தொழிலாளி. இவர் கடந்த 22- ந் தேதி மாலை 5 மணி அளவில் அத்திக்கடையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மது வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்தார்.

அப்போது கோட்டார் கலைநகரை சேர்ந்த ரஞ்சித் என்ற ரஞ்சித் குமாரும் (26) மதுபானம் வாங்குவதற்காக வரிசையில் நின்றுள்ளார். அப்போது கூட்ட நெரிசலில் மகாலிங்கத்திற்கும் ரஞ்சித் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மறுநாள் மாலை அதே டாஸ்மாக் கடைக்கு மகாலிங்கம் சென்றுள்ளார். வழியில் கொய்யன் விளை பகுதியில் வைத்து ரஞ்சித் குமாரும் அவருடைய நண்பர் மணியன் விளையைச் சேர்ந்த கனகராஜ் (34) என்பவரும் வழிமறித்து மகாலிங்கத்தை தலை, கை, கால் உட்பட பல இடங்களில் அரிவாளால் வெட்டியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்த இரண்டு மது பாட்டில்கள், மற்றும் பணத்தையும் பறித்து விட்டு தப்பி சென்றுள்ளனர். அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த மகாலிங்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈத்தாமொழியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மகாலிங்கம் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் ஈத்தா மொழி போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சாமி வழக்கு பதிவு செய்தார். ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் காந்திமதி மேல் விசாரணை நடத்தி வந்தார்.

இந்நிலையில் மகா லிங்கத்தை அரிவாளால் வெட்டிய ரஞ்சித் குமாரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். ரஞ்சித் குமார் தற்போது தெற்கு சூரங்குடி அருகே உள்ள இலந்தைய டித்தட்டு பகுதியில் வசித்து வருகிறார். இவரது பெயர் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் தலைமறைவாக உள்ள ரஞ்சித் குமாரின் நண்பர் கனகராஜை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News