- கடும் வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதி
- உடல் குளிச்சிக்கு கம்பங்கூல் தேடி செல்லும் பொதுமக்கள்
கரூர்,
தமிழகத்தில் அதிக அளவு வெயில் தாக்கும் மாவட்டங்களில் ஒன்றாக கரூர் உள்ளது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் க.பரமத்தியில் அதிக அளவு வெயில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கரூரில் வெயில் அளவு 103 டிகிரி அதிகமான காரணத்தால் பொதுமக்கள் பகல் வேளையில் வீட்டில் முடங்கும் நிலை உள்ளது. வெயில் தாக்கத்தை குறைத்துக் கொள்வதற்காக பொது மக்கள் கையில் தண்ணீர் பாட்டில், நீர் மோர் பந்தல், குளிர் பானங்கள், இளநீர், நுங்கு, சர்பத் ஆகியவற்றை கடைகளில் அதிக அளவு வாங்கி அருந்தினர். மேலும் கரூரில் தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் கரூர் நகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும் காந்திகிராமம், வெங்கமேடு, பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, ராயனூர் ஆகிய பகுதிகளில் புளியமரத்தின் நிழல்களில் அதிகமான அளவு கம்பங்கூழ் விற்பனையாக செய்யப்படுகிறது. அதேபோல் கரூரின் பல்வேறு பகுதிகளில் தர்பூசணி விற்பனையும் சூடுபிடித்துள்ளது.