சத்துணவு பணியாளர் கிணற்றில் தவறி விழுந்து சாவு
- சத்துணவு பணியாளர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
- அடிக்கடி வலிப்பு நோய் வருவதாக கூறப்படுகிறது.
கரூர்
கரூர் மாவட்டம், தோகை மலை அருகே உள்ள பொருந்தலூர் ஊராட்சி தெலுங்கப்பட்டியை சேர்ந்தவர் ஆரியமாலா (வயது 45). இவர் தெலுங்கப்பட்டி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் சத்துணவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் ஆரியமாலா பள்ளிக்கு வேலைக்காக நடந்து சென்று கொண்டிருந்தார். தெலுங்கப்பட்டி முருகன் கோவில் அருகே சென்றபோது ஆரியமாலாவுக்கு வலிப்பு ஏற்பட்டு நிலை தடுமாறி அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
தகவலின் பேரில் ேதாகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி ஆரியமாலாவின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் தோகைமலை போலீசார் ஆரியாமாலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்."