சேற்றுக்குள் சிக்கித் தவித்த பசு மாடு மீட்பு
- சேற்றுக்குள் சிக்கித் தவித்த பசு மாடு மீட்க்கப்பட்டது
- தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்திற்கு விரைந்து பசுமாட்டை நீண்ட போராட்டத்திற்கு பிறகு சேற்றுக்குள் இருந்து மீட்டனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே புன்செய் புகளூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 47). இவர் வடிவேல் நகர் தோட்டம் பகுதியில் தனக்கு சொந்தமான பசு மாட்டை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது கொடிக்கால் கிடங்கு சீரமைக்கப்பட்டு இருந்த சேற்று குழிக்குள் பசுமாடு இறங்கிவிட்டது. பின்னர் பசுமாடு அந்த சேற்றுக்குள் இருந்து வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு கொண்டிருந்தது. அதைப் பார்த்த சேகர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து பசுமாட்டை சேற்றுக்குள் இருந்து வெளியே கொண்டு வர முயற்சி செய்தார். இருப்பினும் முடியவில்லை. பின்னர் இதுகுறித்து புகளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்திற்கு விரைந்து பசுமாட்டை நீண்ட போராட்டத்திற்கு பிறகு சேற்றுக்குள் இருந்து மீட்டனர்.