மூதாட்டியை கொலை செய்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
- வேலை செய்த சம்பள பணத்தை வாங்கி வருவதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
- நோட்டமிட்டு அவரை கொலை செய்து பணத்தையும், நகைகளையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா கல்லாவி அருகே உள்ள கும்மனூரை சேர்ந்தவர் ஓபுளி நாயுடு. விவசாயி. இவரது மனைவி பொன்னியம்மாள் (வயது 78). கணவர் இறந்து விட்டதால் அவர் கும்மனூரில் உள்ள தனது மகள் ராதா வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை மூதாட்டி பொன்னியம்மாள் அந்த பகுதியில் உள்ள மாந்தோப்பு வழியாக சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து தலையில் செங்கல்லால் தாக்கினர். மேலும் அவர் காதில் அணிந்திருந்த அரை பவுன் தோடு மற்றும் தங்க தாலி மற்றும் பையில் வைத்திருந்த ரூ.6 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
இதில் படுகாயமடைந்த பொன்னியம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கல்லாவி போலீஸ் நிலையத்திற்கும், பொன்னியம்மாளின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலா அட்வின், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பத்மாவதி, பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது மர்ம நபர்கள் மூதாட்டியின் ஒரு காதில் இருந்த தங்க தோட்டை அறுக்க முடியாததால் காதையே அறுத்து தோட்டை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், மூதாட்டி பொன்னியம்மாள் அந்த பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
வேலை செய்த சம்பள பணத்தை வாங்கி வருவதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். அங்கு ரூ.6 ஆயிரம் சம்பளத்தை வாங்கி கொண்டு அவர் வரும் போது மர்ம நபர்கள் இதை நோட்டமிட்டு அவரை கொலை செய்து பணத்தையும், நகைகளையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.