ஊட்டியில் ஆம்புலன்ஸ்சுக்கு வழிவிட போக்குவரத்தை சீர் செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு
- ராஜேந்திரன் 4 கிலோ மீட்டர் நடந்து சென்று போக்குவரத்தை சீர்படுத்தியுள்ளார்.
- வாகன ஓட்டிகளில் சிலர் இந்த காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு பிரதமர் மோடி வந்தார். பிரதமரின் வருகைக்காக தமிழகம் முழுவதும் இருந்து 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் மிகவும் குறைந்த அளவிலான போலீசார் மட்டுமே பிற பகுதிகளில் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் அதே தினம் மதியம் கோத்தகிரியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் ஊட்டிக்கு நோயாளி ஒருவரை சிகிச்சைக்காக ஏற்றிச் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் தொட்டபெட்டா காட்சி முனை அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
அப்போது அங்கு பணியில் இருந்த கோத்தகிரி போக்குவரத்து சப்-இ ன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தொட்டபெட்டா முதல் சேரிங்கிராஸ் வரை சுமார் 4 கிலோ மீட்டர் நடந்து சென்று போக்குவரத்தை சீர்படுத்தி அங்கிருந்து பிற போலீசார் உதவியுடன் நோயாளியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதைக் கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளில் சிலர் இந்த காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதுடன், அவரைப் பாராட்டி விட்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை பாராட்டியதுடன் சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தார்.