உள்ளூர் செய்திகள்

குரும்பூர் வாலிபர் கொலையில் நண்பரை பிடித்து விசாரணை

Published On 2022-08-30 09:08 GMT   |   Update On 2022-08-30 09:08 GMT
  • வாலிபர் பாட்டிலால் குத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
  • மது குடித்த போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக விக்னேஷ் கொலை செய்யப்பட்டது தெரிவவந்தது.

குரும்பூர்:

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ளது தண்ணீர்பந்தல் கிராமம்.

வாலிபர் கொலை

இங்குள்ள சாஸ்தா கோவில் அருகே சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பாட்டிலால் குத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்டவர் விபரம் தெரியாததால் அவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் இறங்கினர்.

அடையாளம் தெரிந்தது

அதற்காக போலீசாரின் வாட்ஸ்அப் குரூப் மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கு கொலை செய்யப்பட்ட வாலிபரின் உருவப்படத்தை அனுப்பி வைத்தனர்.

அப்போது கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் உள்ள சங்கராப்பேரியை சேர்ந்த மாடசாமி மகன் விக்னேஷ் (வயது25) என்பது தெரியவந்தது.

தனிப்படை

இதைத்தொடர்ந்து அவரை கொலை செய்யவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது தொடர்பாக விசாரணை நடத்த ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் காலி மதுபாட்டிகள் கிடந்ததாலும், விக்னேஷ் பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டதாலும் அவர் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

நண்பரிடம் விசாரணை

அப்போது நண்பர்களுடன் மது குடித்த போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக விக்னேஷ் கொலை செய்யப்பட்டது தெரிவவந்தது. இதைத்தொடர்ந்து அவருடன் மதுக்குடித்த நண்பர்கள் குறித்து விசாரித்தனர்.

இது தொடர்பாக தனிப்படையினர் விக்னேஷ் நண்பர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

Similar News