தெற்கு மண்டலத்தில் குறைதீர்க்கும் முகாம்
- மதுரை தெற்கு மண்டலத்தில் குறைதீர்க்கும் முகாம் 24-ந் தேதி நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
மதுரை மாநகராட்சி பகுதி பொது மக்கள் குறைகளை மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளரிடமும் அந்தந்த மண்டல அலுவ லகங்களில் உதவி ஆணையா ளர்களிடம் நேரடியாக மனுக்களாக கொடுத்து பயன்பெற்று வருகின்றனர்.
மேலும் மாநகராட்சியின் அழைப்பு மையம், வாட்ஸ்அப், முகநூல் தகவல் தொழில்நுட்ப முறையிலும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமை தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்ட லங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
அதன்படி வருகிற 24-ந் தேதி(செவ்வாய்கிழமை) சி.எம்.ஆர். சாலையில் உள்ள மதுரை மாநகராட்சியின் தெற்கு மண்டல அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.
தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு பகுதிகளான செல்லூர், ஆழ்வார்புரம், ஐராவதநல்லூர், காமராஜர் சாலை, பங்கஜம் காலனி, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, காமராஜபுரம், பழைய குயவர்பாளையம், சின்னக்கடை தெரு, லட்சுமிபுரம், காயிதேமில்லத் நகர், செட்டியூரணி, கீழவெளிவீதி, கீரைத்துறை, வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அனுப்பானடி, சிந்தாமணி, கதிர்வேல் நகர் ஆகிய பகுதி பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.