உள்ளூர் செய்திகள்

வில்லாபுரத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மறியல்

Published On 2022-11-14 08:49 GMT   |   Update On 2022-11-14 08:49 GMT
  • மதுரையில் மழைநீருடன் கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

வில்லாபுரத்தில் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கியிருப்பதை படத்தில் காணலாம்.

 மதுரை

மதுரையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மதுரை மாநகரில் மழை நீரை வெளியேற்றுவதற்கான கட்டமைப்புகள் சரி வர அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாக்கடை அடைப்புகள் தொடர் கதையாக உள்ளன.

மதுரை மாநகராட்சி 86-ம் வார்டான வில்லாபுரம் அம்மச்சியார் கோவில் தெருவில், கடந்த ஒரு வார காலமாக பாதாள சாக்கடை அடைப்பு பிரச்சினை உள்ளது. இதன் காரணமாக மழை நீருடன் சாக்கடை கழிவுகளும் வீடுகளுக்குள் புகுந்து உள்ளது. எனவே அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். அதுவும் தவிர கொசுத்தொல்லை உள்பட பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

இது தொடர்பாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சியிடம் புகார் கொடுத்தனர். ஆனாலும் நடவடிக்கை இல்லை.

இதை கண்டித்தும், மழை, கழிவுநீரை அகற்றக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பகுதி பொதுமக்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து, வில்லாபுரம் ஆர்ச் சாலையில் இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News