உள்ளூர் செய்திகள் (District)

கோவிலில் புகுந்து வேல் திருடியவர் கைது

Published On 2023-01-02 06:02 GMT   |   Update On 2023-01-02 06:03 GMT
  • பேரையூர் அருகே கோவிலில் புகுந்து வேல் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
  • இதுகுறித்து பேரையூர் போலீசார் ராமரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சின்னரெட்டிபட்டியை சேர்ந்தவர் மகாதேவன்(37). இவர் சென்னையில் சினிமா துறையில் வேலை பார்த்து வருகிறார். வருடம்தோறும் பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து பாத யாத்திரை செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு மாலை அணிந்து பாதயாத்திரை செல்வதற்காக 15 தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். மேலும் பழனி முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ரூ. 1,500 மதிப்புள்ள பித்தளை வேல் வாங்கி சின்னா ரெட்டிபட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் பூஜை செய்து வேலை கோவிலில் வைத்திருந்தார்.

மறுநாள் அதிகாலை பார்த்தபோது அந்த வேலை காணவில்லை. பல இடங்களில் தேடியும் வேல் கிடைக்காததால் மகாதேவன் பாதயாத்திரை சென்று விட்டார். பாதயாத்திரை சென்றுவிட்டு நேற்று வந்து விசாரித்த போது அல்லிகுண்டம் பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த ராமர் என்பவர் வேலை திருடிச்சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து பேரையூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் ராமரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News