போச்சம்பள்ளியில் பணமோசடி:தற்கொலைக்கு முயன்ற பைனான்ஸ் உரிமையாளர் மீது வழக்கு
- போலீசார் தீவிர விசாரணை
- 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் ஸ்ரீ குமரன் பைனான்ஸ் என்கிற நிதி நிறுவனத்தை தனபால் (55) என்பவர் நடத்தி வருகிறார். இந்த பைனான்சில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500 -க்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வந்துள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டு காலமாக சீட்டு பணம் நிறைவடைந்த நிலையில், பணத்தை திருப்பி தராமல் பைனான்ஸ் கம்பெனியில் உரிமையாளர் தனபால் ஏமாற்றி வந்துள்ளார்.
இது சம்மந்தமாக பாதிக்கப் பட்டோர் போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் தனபாலை அழைத்து விசாரித்தபோது, அவரது பேரில் இயங்கி வரும் மாங்கூல் உற்பத்தி தொழிற் சாலையை விற்று பணத்தை தருவதாகவும், அதற்கு ஒரு மாத கால அவகாசம் கேட்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது மாங்கூல் தொழிற்சாலை விற்பனை செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை தராமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் காவல் நிலையம் கூடிய பாதிக்கப்பட்ட மக்கள் பணத்தை பெற்றுத்தர போலீசாரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் பணத்தை திருப்பித்தர உத்திர வாதம் தராததால் நேற்று போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் உள்ள நிதி நிறுவனத்தை பாதிக்கப்பட்ட மக்கள் 50 ற்கும் மேற்பட்டோர் கூடி தனபாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆத்திரம் கொண்ட தனபால், நிதி நிறுவன ஷோகேஸ் கண்ணாடியை கையால் உடைத்து, அதிலிருந்து சிதறிய கண்ணாடி துண்டை எடுத்துக் கொண்டு தன்னைத்தானே உடம்பில் அனைத்து பகுதி களிலும் குத்திக்கொண்டார்.
ரத்த வெள்ளத்தில் நிதி நிறுவனத்தை விட்டு வெளியே வந்து மீண்டும் தன்னைத்தானே குத்திக்கொண்டதால், பொது மக்கள் பயந்து சிதறியடித்து ஓடினர்.
பாதுகாப்பிற்காக அங்கிருந்த போலீசார் நெருங்கும்போது கண்ணாடி துண்டை கழுத்தில் வைத்து அறுத்துக்கொள்வதாக கூறியதால் காவலர்கள் அவரை நெருங்க முடியாமல் தவித்து வந்தனர். பின்னர் ஒரு கட்டத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழ, போலீசாரும் பொது மக்களும் ஓடி சென்று அவர் கையிலிருந்த கண்ணாடி துண்டை அகற்றி, அவரை இரு சக்கர வாகனம் மூலம் போச்சம்பள்ளி அரசு மருத்து வமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் நிதி நிறுவன உரிமையாளர் தனபால் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஏமாற்றப்பட்ட மக்கள் பணத்தை திருப்பி கேட்டதால் தனபால் தன்னைத்தானே குத்திக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.