பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை- தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
- தூத்துக்குடி மாநகர் முழுவதும் அமைச்சர், மேயர், அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
- மழைநீர் தேங்காதவாறு பாதுகாக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மழையின் காரணமாக மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் பல்வேறு கட்ட முன்னெச் சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு பாதிப்பை போல் இந்த ஆண்டு மழைகாலங்களில் அது போன்ற நிலை வரக்கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி மாநகராட்சி பகுதி முழுவதும் புதிய கால்வாய் சாலை வசதி என கட்டமைப்பு பணிகளை விரைவாக செய்துகொடுக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை மாநகர் முழுவதும் அதிகாரிகள் உள்பட அமைச்சர், மேயர் கண்காணித்து வருகின்றனர்.
50-வது வார்டு என்.ஜி.ஓ. காலனி கிழக்கு தாழ்வான பகுதிகளில் மழைநீர் கடந்த காலங்களில் தேங்கியதையடுத்து இந்த ஆண்டு அது போல் நடைபெறாமல் பாதுகாத்து கொள்ளும் வகையில் 50-வது வார்டு கவுன்சிலர் சரவணக்குமாரிடம் பகுதி சபா கூட்டத்தின் போது பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதியில் சாலையை உயர்த்துவது, மணல் சரல் போன்றவற்றை நிரப்பி மழைநீர் தேங்காதவாறு பாதுகாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு பணியை தொடங்கி வைத்தார்.
ஆய்வின் போது மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் சரவணக்குமார், வட்டப்பிரதிநிதிகள் வேல்மணி, ராஜேந்திரன், செல்வம், ராஜேஷ், சங்கரநாராயணன், பகுதி சபா உறுப்பினர் சிவசங்கர், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.