உள்ளூர் செய்திகள் (District)

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த, கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன்.

பரமத்திவேலூர் பகுதி முருகன் கோவில்களில் சிறப்பு ஆராதனை

Published On 2023-07-14 04:32 GMT   |   Update On 2023-07-14 04:32 GMT
  • கிருத்திகையை முன்னிட்டு பரமத்திவேலூர் பகுதி முருகன் கோவில்களில் சிறப்பு ஆராதனையும் 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
  • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள பாலமுருகனுக்கு ஆனிமாத கிருத்திகையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிகார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவில், கபிலர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர் கோவில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், ராஜா சுவாமி கோவில் உள்ள ராஜா சுவாமி, பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன், மற்றும் சுள்ளிப்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வான சமேத சுப்பிரமணியர் கோவில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News