உள்ளூர் செய்திகள்

நெத்திலி மீன் சேகரித்தவர்களை காணலாம்

குளச்சலில் நெத்திலி மீன் விலை வீழ்ச்சி- மீனவர்கள் கவலை

Published On 2023-03-04 03:07 GMT   |   Update On 2023-03-04 03:07 GMT
  • விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்புவது வழக்கம்.
  • விசைப்படகில் பிடித்து வரப்பட்ட மீன்கள் தோட்டுக்கணவாய், புல்லன் இன்று சராசரி விலைக்குதான் போனது.

குளச்சல்:

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளிலும் மீனவர்கள் மீன் பிடிதொழில் செய்து வருகிறார்கள்.

விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்புவது வழக்கம். பைபர் படகுகள் காலையில் சென்று விட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும். தற்போது விசைப்படகுகளில் கணவாய், புல்லன், கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் சீசனாகும். நேற்று கரை திரும்பிய விசைப்படகுகளில் கணவாய், தோட்டுக்கணவாய், புல்லன் போன்ற மீன்கள் கிடைத்தன. மீனவர்கள் அவற்றை ஏலக்கூடத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். தோட்டுக்கணவாய் மீன் கிலோ ரூ.480-க்கும், சிறிய ரக கணவாய் ரூ.80 முதல் ரூ.90 வரையும் விலை போனது. 35 கிலோ கொண்ட ஒரு பெட்டி புல்லன் மீன்கள் ரூ.1500 வரை விலை போனது.

அதே சமயம் காலையில் ரூ.1300-க்கு விலை போன ஒரு குட்டை நெத்திலி மீன்கள் பின்னர் விலை வீழ்ச்சியடைந்து ரூ.800-க்கு போனது. இதனால் மீனவர்கள் கவலையடைந்தனர்.

இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறியதாவது:-

விசைப்படகில் பிடித்து வரப்பட்ட மீன்கள் தோட்டுக்கணவாய், புல்லன் இன்று சராசரி விலைக்குதான் போனது. பெரிய மாற்றம் எதுவுமில்லை. நெத்திலி மீன்களை பொறுத்தவரை விலை மிக குறைவு. இந்த மீன்கள் முன்பு ரூ.2 ஆயிரம் வரை விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News