ஜல்லிக்கற்கள் பெயர்ந்த புதிய சிமெண்டு சாலை
- சாலை பணி ஆமை வேகத்தில் நடைபெற்று கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.
- சாலை 5 மாதத்தில் பெயர்ந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோத்தகிரி,
கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கம்பாய்கடை ஹாப்பிவேலி பகுதியில் சுமார் 400 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் உபயோகித்து வந்த சிமெண்ட் சாலை பழுதடைந்ததால் அதனை சரி செய்து தர வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதி மக்கள் மனு மூலமாக கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்திற்கு தெரிவித்தனர்.
பழுதடைந்த சாலை குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் புதிய சாலை அமைக்க நுழைவு வரி திட்டம் மூலம் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்தனர். அதன் மூலம் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் சாலை பணி ஆமை வேகத்தில் நடைபெற்று கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.
5 மாதங்கள் முடிந்த நிலையில் தற்போது அந்த சாலையில் சிமெண்ட் மற்றும் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட சாலை 5 மாதத்தில் பெயர்ந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தரமற்ற பொருட்களை கொண்டு சாலை அமைக்கப்பட்டதா என்ற கேள்வியும் இப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.