ஓ.பன்னீர்செல்வம் அணி-அ.ம.மு.க.வினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம்- எழும்பூரில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்தனர்
- சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- உண்மை குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
சென்னை:
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது கொடநாடு பங்களாவில் கொலை-கொள்ளை நடந்தது. எடப்பாடி பழனி சாமி முதல்-அமைச்சராக இருந்தபோது நடந்த சம்பவத்தை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடந்தது.
இந்த வழக்கில் இதுவரையில் குற்றவாளிகள் யார் என்பதை உறுதி செய்யாத நிலையில் வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் யார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், அவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் அ.ம.மு.க.வினருடன் இணைந்து ஓ.பி.எஸ். அணியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் செந்தமிழன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த 7 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், அ.ம.மு.க. நிர்வாகிகள் என ஆயிரத்திற் கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கொடநாடு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும், உண்மை குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி செயலாளர் ஆர்.ராஜ லட்சுமி, மீனவர் அணி செயலாளர் கோசுமணி திரு.வி.க.நகர் வடக்கு பகுதி செயலாளர் சிவக்குமார், ராயபுரம் கிழக்கு பகுதி செயலாளர் அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலாளர்கள் த.மகிழன்பன், வி.என்.பி. வெங்கட்ராமன், எம்.எம்.பாபு, ராயபுரம் பி.எஸ். சிவா, வழக்கறிஞர் எம்.வி.சதீஷ், ரெட்சன் சி.அம்பி காபதி, என்.கே.அச்சுதன் ஆகியோர் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடந்தது.
வள்ளுவர் கோட்டம் அருகில் வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெ.கே.ரமேஷ், பகுதி செயலாளர்கள் பிரேம் குமார், சக்தி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சாஸ்தா சரண், அயன்புரம் சரவணன், அயன்புரம் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.