மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
- அந்த வழியாக மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்து அர்ஜூனன் மீது மோதியது.
- தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்த ஜிஞ்சம்பட்டி அருகே சரவண கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது60). இவர் இன்று காலை 6 மணியளவில் வீட்டில் இருந்து பர்கூர்-மத்தூர் சாலையில் உள்ள கடைக்கு பால் வாங்க சென்றார்.
அப்போது பால்வாங்கி விட்டு அங்குள்ள மின்வாரிய துறை அலுவலகம் அருகே வந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்து அர்ஜூனன் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மத்தூர் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த அர்ஜூனன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.