பாவூர்சத்திரம் அருகே பாழடைந்த கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
- கழிவு பொருட்களை கொண்டு கொட்டுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.
- குழந்தைகளின் நலன் கருதி இந்த கிணற்றை முழுமையாக மூடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி:
கீழப்பாவூர் ஒன்றியம் குலசேகரபட்டி பஞ்சாயத்து குறும்பலாப்பேரி 7வது வார்டு உலகாசிபுரத்தில் நவநீத கிருஷ்ணன் என்பவரின் வீட்டின் முன்பு பாழடைந்த பொதுக்கிணறு ஒன்று உள்ளது. இதனை பலர் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்துவதாலும் இறந்த விலங்குகளின் உடல்கள் மற்றும் கழிவு பொருட்களை கொண்டு கொட்டுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.
இதனால் குடியிருப்பு வாசிகளுக்கு தொற்றுநோய் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழை காலங்களில் பாழடைந்த கிணறு முழுவதும் நீர் நிரம்பி விடுவதால் கிணற்றின் அருகே செல்லும் பாதையை தினமும் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லும் பாதையாக பயன்படுத்தி வரும் சூழ்நிலை இருப்பதால் பள்ளி குழந்தைகளின் நலன் கருதி இந்த கிணற்றை முழுமையாக மூடவேண்டும் என அப்பகுதியிலுள்ள குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பலமுறை குலசேகரபட்டி பஞ்சாயத்து மற்றும் கீழப்பாவூர் யூனியனிலும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் சார்பில் கேட்டுக் கொண்டதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
பாழடைந்த கிணறு முழுமையாக மூட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.