உள்ளூர் செய்திகள்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா

Published On 2023-05-23 06:37 GMT   |   Update On 2023-05-23 06:37 GMT
  • சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது
  • அன்னதான நிகழ்ச்சி தினந்தோறும் நடந்தது

பெரம்பலூர்:

பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமைபெற்ற ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலில் ராஜகோபுரம் மற்றும் பெரியசாமி மலையில் உள்ள சுதை சிற்பங்கள் புதுப்பிக்கப்பட்டு பெரியசாமி மலைக்கோவிலுக்கு கடந்த மாதம் 3-ந் தேதியும், ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலுக்கு 5-ந் தேதியும் அஷ்டபந்தன மகா கும்பாபிேஷகங்கள் விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து முடிந்த மறுநாள் முதல் மண்டல பூஜை தொடங்கி தினந்தோறும் மண்டல அபிஷேக விழா நடந்தது.

கடந்த 20-ந் தேதி பெரியசாமி மலைக்கோவிலில் மண்டலபூஜை நிறைவுவிழா நடந்தது. இதில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால், ஆண் பக்தர்கள் திரளானவர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலில் நேற்று மண்டலாபிஷேக நிறைவுவிழா நடந்தது. இதனை முன்னிட்டு கோவில் பிரகாரத்தில் உற்சவ அம்பாள் அலங்கரித்து வைத்து 2 கால யாகசாலை பூஜைகள் நடந்தன. கும்பகலசத்திற்கு சிறப்பு பூஜைகளும் நடந்தன.

யாகசாலை மற்றும் கும்ப பூஜைகளை திருமணஞ்சேரி உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார் குழுவினர் நடத்திவைத்தனர். அதனைத்தொடர்ந்து கடம்புறப்பாடும் நடந்தது. மூலவர் சன்னதியில் மதுரகாளியம்மனுக்கு கலச நீர் அபிஷேகம் செய்விக்கப்பட்டு, பக்தர்கள் மீது கோவில் பூசாரியார்கள் புனிதநீரை தெளித்தனர். மண்டலாபிஷேக நிறைவுவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை மற்றும் திருப்பணிக்குழுவினர், இந்துசமய அறநிலையத்துறையினர், சேவார்த்திகள் செய்திருந்தனர். கும்பாபிஷேகம் தொடங்கி மண்டல அபிஷேக நிறைவு விழா நேற்று வரை 48 நாட்களும் கோவில் திருமணமண்டபத்தில் மகா அன்னதான நிகழ்ச்சி தினந்தோறும் நடந்தது.

Tags:    

Similar News