உள்ளூர் செய்திகள்

அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Published On 2023-05-21 05:25 GMT   |   Update On 2023-05-21 05:25 GMT
  • அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது
  • தீ மிதிக்கும் பக்தர்கள் காப்புக்கட்டி கொண்டு பூ கரகம் ஜோடிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வந்தனர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள வாலிகண்டபுரத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 6-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக, ஆராதனைகள், இரவு கரக திருவிழா மற்றும் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று மதியம் தீ மிதிக்கும் பக்தர்கள் காப்புக்கட்டி கொண்டு பூ கரகம் ஜோடிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பின்னர் கோவில் அருகே உள்ள அக்னி குண்டத்தில் பக்தர்கள் ஒவ்வொருவராக இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத் தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகமும், இரவு தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. தீமிதி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News