- சர்வதேச முதியோர் தின விழா நடைபெற்றது
- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தின விழா தந்தை ரோவர் முதியோர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு ரோவர் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவன தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட சமூக நல அலுவலர் ரவிபாலா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மன நல மருத்துவர் டாக்டர் வினோத், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல் ரஞ்சித்குமார், வட்டார மருத்துவர் டாக்டர் சூரியகுமார் ஆகியோர் பேசினர்.
விழாவையொட்டி இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது, அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அரசு மருத்துவர்களால் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும் மன நல ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இதில் முதியோர்கள் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. முடிவில் சகி ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி கீதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ரோவர் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்.