அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் - கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
- ஊராட்சியின் அடிப்படை வசதிகள் உட்பட அனைத்து பணிகளும் செயல்பட கிராமசபை கூட்டம் ஊன்றுகோளாக அமைகின்றன.
- மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அவிநாசி :
அவிநாசி ஊராட்சி ஒன்றியம் சின்னேரிபாளையம் ஊராட்சியில் குடியரசு தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலெக்டர் வினீத் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:- ஒவ்வொரு முறையும் தங்கள் பகுதியில் நடக்கும் கிராம சபை கூட்டத்தின் போது பொதுமக்கள் முழு அளவில் கலந்து கொண்டு ஊராட்சியின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசித்து செயல்படும் போது அந்த ஊராட்சியின் அடிப்படை வசதிகள் உட்பட அனைத்து பணிகளும் செயல்பட கிராமசபை கூட்டம் ஊன்றுகோளாக அமைகின்றன.
இது போன்ற கிராமசபை கூட்டத்தில் திட்ட பணிகளை மேற்கொள்ளப்படுவது மட்டுமின்றி பொது சுகாதாரத்தை கடைபிடித்தல், வீடுகள் மற்றும் தெருக்களை சுத்தமாக வைத்து டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் தாக்குதலை தடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதுவாக இருக்கும்.
ஊராட்சி அளவில் மகளிர் திட்டம் மூலமாக செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டது. குழுக்கள் மிகவும் குறைவாக உள்ளதால் மேலும் குழுக்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழுக்கள் அமைக்க வட்டார அளவில் மற்றும் ஊராட்சி அளவிலான அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும்.
ஒரு குழுக்களுக்கு 12 நபர்கள் இருந்தால் போதும். அவ்வாறு குழுக்கள் அமைக்கும் போது ரூ.1 லட்சம் முதல் கடனாக வழங்கப்படுகிறது. இன்றைய தினம், குழுக்களுக்கு ரூ.49 லட்சம் வரையிலும் கடனாக குடியரசு தின விழாவில் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழில்கள் தொடங்கி சிறப்பாக செயல்படுத்த குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
சிறு, குறு விவசாயிகள் சான்று விண்ணப்பித்து அரசின் சலுகைகளை விவசாயிகள் பெறலாம். பள்ளிக்கல்வித்துறையின் மூலம் எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடிக்கல்வி உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சியில் 4 குழந்தைகள் பள்ளிக்கு வருகை தராமல் இருப்பதாக தெரிகின்றது.
பள்ளி மேலாண்மை குழு மூலம் அவர்களை பள்ளிக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதலமைச்சர் கோப்பை நடைபெற்று வருகிறது. அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். அடிப்படை தேவைகள் குறித்து ஊராட்சி மன்றத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.
அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்டங்களையும் பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும் என்றார்.
முன்னதாக, 4 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.4.40 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கி, தொழு நோய் மூலம் பதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 2 நபர்களுக்கு பொன்னாடை அணிவித்தார்.
தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மாரியப்பன், சின்னேரிபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.