புதுக்கோட்டையில் 100வது மனதின் குரல் நிகழ்ச்சி கொண்டாட்டம்
- 14 மொழிகளில் தொகுக்கப்பட்ட பிரதமரின் உரை டிஜிட்டல் புத்தகமாக வெளியீடு
- ஏவிசிசி கணேசன் முன்னிலையில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வெளியிட்டார்
புதுக்கோட்டை,
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் நூறாவது மனதின் குரல் உரையானது, புதுக்கோட்டை திலகர் திடல் ஏவிசிசி பள்ளி வளாகத்தில் நேரடியாக தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஒளிபரப்பு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளிகள், வியாபாரிகள், சமூக சேவகர்கள் என அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டனர். பிரதமரின் நூறாவது உரையாடலுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், 14 மொழிகளில் தொகுக்கப்பட்ட பிரதமரின் மன் கி பாத் டிஜிட்டல் புத்தகத்தை பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் ஏவிசிசி கணேசன் முன்னிலையில், டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வெளியிட்டார். முதல் பிரதியை பாஜக மாவட்ட பார்வையாளர் பழ.செல்வம், நகர தலைவர்கள் லெட்சுமணன், சக்திவேல், அணிப்பிரிவு மாவட்ட தலைவர்கள் சுப்பிரமணியன், மணிராஜன் மற்றும் நகர நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.