- இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது
- பொதுமக்கள் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பன்னீர் தேவர் நினைவு கல்வி அறக்கட்டளை, திருச்சி அப்பல்லோ மருத்துவமனை மற்றும் கறம்பக்குடி அரசு மருத்துவமனை சித்தா பிரிவு ஆகியவை இணைந்து மழைக்கால இலவச பொது மருத்துவ முகாம் சுக்கிரன் விடுதியில் உள்ள பன்னீர் தேவர் திருமண மஹாலில் நடைபெற்றது.
முகாமை தொழில் அதிபர் கரிகாலன் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, இந்த அறக்கட்டளையின் மூலம் இந்தப் பகுதியில் இது நான்காவது இலவச பொது மருத்துவ முகாம். இனிவரும் காலங்களில் இப்பகுதியில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து அறக்கட்டளை மூலம் சேவைகள் தொடரும் என்றார்.
முன்னதாக வருகை தந்த அனைவரையும் பழனி அருள்மிகு ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி பேராசிரியரும் பிரபல பட்டிமன்ற நடுவருமான தங்க ரவிசங்கர் வரவேற்று பேசினார். முகாமில் திருச்சி அப்போலோ மருத்துவமனையின் இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் ரவீந்திரன், புதுக்கோட்டை மாவட்ட சித்தா பிரிவு மாவட்ட அலுவலர் வனஜா, கறம்பக்குடி அரசு மருத்துவமனை சித்தா பிரிவு டாக்டர் சுயமரியாதை ஆகியோர் மருத்துவ சம்பந்தமான அறிவுரைகளை பொதுமக்களுக்கு வழங்கினர். முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருந்து மாத்திரைகள் பெற்று பயன்பெற்றனர். முகாமில் கலந்து கொண்ட அனைத்து பொதுமக்களுக்கும் சித்த மருத்துவ துறையின் மூலம் கபசர குடிநீர், நிலவேம்பு கசாயம், ஆடாதொடை கசாயம், முடக்கத்தான் கசாயம் ஆகியவை வழங்கப்பட்டது. முடிவில் அறக்கட்டளையின் செயலாளர் கருப்பையா நன்றி கூறினார்.