பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
- ராமநாதபுரத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடந்தது.
- இந்த போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை நடைபெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டியை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
சைக்கிள் போட்டியில் 13 வயது பிரிவில் மாணவர்கள்-15 கி.மீ., மாணவிகள்-10 கி.மீ., சைக்கிள் ஓட்ட வேண்டும். 15- 17 வயதிற்குட்பட்ட பிரிவில் மாணவர்கள்- 20 கி.மீ., மாணவிகள்- 15 கி.மீ., கடக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இ.சி.ஆர். 4 வழிச்சாலை பிரிவில் தொடங்கி, மதுரை ரோடு, பாப்பாக்குடி பஸ் ஸ்டாப், நயினார்கோவில் வளைவிற்கு சென்று, மீண்டும் இ.சி.ஆர்., சாலைக்கு திரும்பி வந்தனர். போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, 2வது பரிசு ரூ.3000, 3வது பரிசு ரூ.2000, 4 முதல் 10 வது இடம் வருபவர்களுக்கு தலா ரூ.250 பரிசு வழங்கினர். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட விளையாட்டு, இளைஞர் நல அலுவலர் செந்தில்குமார் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.