விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி
- விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி நடந்தது.
- தொழில் நுட்ப மேலாளர் கோசலாதேவி செய்திருந்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் வட்டார வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் உள்ள உழவர் மையத்தில் விதை உற்பத்தி பயிற்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி நடந்தது. மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத்திட்டம்) விஜயலட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) முருகேசன் கலந்து கொண்டு வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும், உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட கலவை உபயோகித்தால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்தும் விவசாயிகளிடம் எடுத்துக் கூறினார்.
ராமநாதபுரம் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி, விதைச்சான்று அலுவலர் சீராளன் ஆகியோர் விதைகள் வாங்கும் பொழுது கவனிக்கப்பட வேண்டிய விபரங்கள், விதைகளின் குணங்கள், விதைகள் தேர்வு விதை தரம் பிரித்தல், விதை உற்பத்தி ஏற்ற ரகங்கள், பருவங்கள், விதை முளைப்புத்திறன், விதை தூய்மை கணக்கிடும் முறைகள், விதைப்பு அறிக்கை பதிவு செய்தல், சான்று கட்டணம், வயலாய்வுக்கட்டணம் மற்றும் கலவன் நீக்குதல், விதைப்பண்ணை அமைக்கும் பொழுது விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதைச்சான்று நடைமுறைகள் குறித்தும் பயிற்சியளித்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். ராமநாதபுரம் உதவி விதை அலுவலர் பாஸ்கரன், உச்சிப்புளி உதவி விதை அலுவலர் ஆனந்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில் நுட்ப மேலாளர் கோசலாதேவி செய்திருந்தார்.