- சாயல்குடி அருகே மறவர் கரிசல்குளத்தில் வில்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மறவர் கரிசல்குளம் கிராமத்தில் வில்வநாதர், விநாயகர், அரியநாச்சி அம்மன், சுப்பிரமணியர், தவசி தம்பிரான், தவமுனி மற்றும் பரிவார தெய்வங்கள் ராஜகோபுர கும்பாபிஷேக விழா நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் வில்வநாதர் சுவாமி.
இதையொட்டி கடந்த 1-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்பு மதுரை ஆதீனம் சுந்தர மூர்த்தி ஞானசம்பந்த தேசிகர் சுவாமிகள், கோவை காமாட்சி ஆதீனம் ஞானகுரு சிவலிங்கேசுவர சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிந்தலக்கரை காலிபராசக்தி சித்தர் பீடம் ராமமூர்த்தி அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கடந்த 3 தினங்களாக சுவாமிக்கு விக்னேசுவர பூஜை, புண்ணியாக வசானம், மகா சங்கல்பம், மகா கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், கணபதி வழிபாடு, வாஸ்து ஹோமம், கும்ப அலங்காரம் யாகசாலை பிரவேசம், முதல், 2-ம் கால, 3-ம் கால பூஜைகள், எந்திர பிரதிஷ்டை, விக்ரகப் பிரதிஷ்டை, மருந்து சாத்துதல், 4-ம் கால யாகம், கஜ, கோ, தன, சர்ப பூஜைகள் நடந்தன.
இறுதி நாளான நேற்று கடம் புறப்பாடு நடந்து கோபுர கலசம், மூலஸ்தானம் மற்றும் சுவாமிகளுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 4 நாட்களாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.