கடையம் அருகே பலத்த சூறைக்காற்றால் 4 வீடுகளின் மேற்கூரை சேதம்
- தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீச தொடங்கி உள்ளது.
- தர்மபுரம் மடம் ஊராட்சி மன்ற தலைவர் ஜன்னத் சதாம் உசேன் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
கடையம்:
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீச தொடங்கி உள்ளது.
தென்காசி, கடையம், செங்கோட்டை பகுதிகளில் நேற்று பலத்த சூறைக்காற்று வீசியது. ஆழ்வார்குறிச்சி அருகே தர்மபுரம் மடம் ஊராட்சியில் நேற்று இரவு பலத்த சூறைக்காற்று காரணமாக நீலமேகபுரம் பகுதியில் வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன.
அந்த பகுதியை சேர்ந்த கனகராஜ், ஆறுமுகம், சிதம்பரம், அன்னலெட்சுமி ஆகியோரின் 4 வீடுகளின் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரைகள் முற்றிலுமாக சேதமடைந்தது.
தகவல் அறிந்த தர்மபுரம் மடம் ஊராட்சி மன்ற தலைவர் ஜன்னத் சதாம் உசேன் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உரிய அதிகாரிகளை சந்தித்து நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தங்குவதற்கு இடம் இல்லாததால் பஞ்சாயத்துக்கு சொந்தமான இ-சேவை மையத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.