மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும்
- கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் போதுமானது அல்ல.
- ஈரப்பதம் நிரந்தரமாக 22 சதவீதம் என மத்திய அரசு அறிவிக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
தஞ்சாவூா்:
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தஞ்சாவூர் ஒன்றிய மாநாடு இன்று நடைபெற்றது. ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ஜான் பீட்டர் தலைமை வகித்தார்.
மாநாட்டினை தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரமோகன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். வேலை அறிக்கையை ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் முன்வைத்தார்.
இந்த மாநாட்டில், தற்போது பெய்த பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் போதுமானது அல்ல. எனவே ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும்.
நெல் கொள்முதலில் ஈரப்பதம் நிரந்தரமாக 22 சதவீதம் என மத்திய அரசு அறிவிக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, விவசாய சங்க தேசிய குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மாநில குழு உறுப்பினர் பாஸ்கர் , இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா, மாநகர செயலாளர் பிரபாகரன் , ஒன்றிய செயலாளர் ஜார்ஜ்துரை, இந்திய தேசிய மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் விவசாய சங்க ஒன்றிய பொருளாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.