உள்ளூர் செய்திகள் (District)

மாணவிகளுக்கு தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கல்வி உதவித்தொகை வழங்கிய காட்சி.


சங்கை: விபத்தில் தாயை இழந்த மாணவிகளின் கல்வி செலவுக்கு ரூ.20 ஆயிரம் உதவித்தொகை-சிவபத்மநாதன் வழங்கினார்

Published On 2022-08-21 08:11 GMT   |   Update On 2022-08-21 08:11 GMT
  • முத்துமாரி (34) கடந்த மே மாதம் 23-ந் தேதி அன்று திருவேங்கடம் சாலை இணைப்புச் சாலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது கார் மோதி பலியானார்.
  • கலாராணி 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 358 மதிப்பெண்களும், வாணிஸ்ரீ 433 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றனர்.

சங்கரன்கோவில்:


சங்கரன்கோவில் காந்தி நகர் 4-ம் கீழ தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 40). இவர் சங்கரன் கோவில் உள்ள தனியார் கேஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார்.


இவரது மனைவி முத்துமாரி (34) கடந்த மே மாதம் 23-ந் தேதி அன்று திருவேங்கடம் சாலை இணைப்புச் சாலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது கார் மோதி பலி யானார்.


இவர்களுக்கு கலாராணி, வாணிஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவி இறந்த மறுநாள் பெரியசாமியின் மகள்களுக்கு 10-ம் வகுப்பு கணித பரீட்சை இருந்துள்ளது. பிள்ளைகளின் படிப்பு கெட்டு விடக்கூடாது என்ற நினைப்பில் அவர் தன் மனைவி இறந்ததை குழந்தைகளிடம் சொல்லாமல் அவர்களை அவர்கள் பாட்டி வீட்டுக்கு அனுப்பி தங்க வைத்து மறுநாள் பரீட்சை எழுத வைத்துள்ளார்.


தன் தாய் இறந்தது தெரியாமல் வழக்கம்போல் படித்துவிட்டு தேர்வு எழுதினர். இந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி யது.


இந்நிலையில் கலாராணி 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 358 மதிப்பெண்களும், வாணிஸ்ரீ 433 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றனர். தற்போது சங்கரன் கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட தி.மு.க. மகளிர் தொண்டரணி அமைப்பாளர் புனிதாஅஜய்மகேஷ்குமார் ஏற்பாட்டில் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், பெரியசாமி வீட்டுக்கு சென்று பெரியசாமி மற்றும் அவரின் மகள்களுக்கு ஆறுதல் கூறினார்.


தொடர்ந்து 2 பெண் குழந்தைகளின் கல்வி செலவுக்காக ரூ. 20 ஆயிரம் வழங்கினார்.


இதில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், நகர நிர்வாகி பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சரவணன், நகர விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அஜய் மகேஷ்குமார், மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் முத்து மணி கண்டன், பாட்டத்தூர் சண்முகையா, சபரிநாத், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News