மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவிடம்- சீமான் வரவேற்பு
- பொது பட்ஜெட் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை மட்டுமே கொண்டு இருக்கிறது.
- பட்ஜெட்டில் மக்கள் நலனையும், அவர்களது வாழ்வியல் மேம்பாட்டையும் முன்வைக்கிற திட்டங்கள் எதுவுமில்லை.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, இப்போது தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளை கண்டறிந்து, அவர்களுக்கு மட்டுமே உரிமைத்தொகையை வழங்குவோம் என அறிவித்திருப்பது அப்பட்டமான மோசடித்தனமாகும்.
சென்னையில் மொழிப்போர் தியாகி நடராஜன், தாளமுத்துவுக்கு நினைவிடம் அமைக்கப்படுமென அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேசமயம், தாளமுத்து, நடராஜன் ஆகிய இருவரது நினைவு நாள் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில், மொழிப்போர் எழுச்சியைக் கொண்டு அதிகாரத்திற்கு வந்த தி.மு.க., இப்போதுதான் அவர்களுக்கு நினைவிடம் கட்ட முற்படுகிறதென்பது வரலாற்றுப்பேரவலமாகும்.
பொது பட்ஜெட் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை மட்டுமே கொண்டு இருக்கிறது. மக்கள் நலனையும், அவர்களது வாழ்வியல் மேம்பாட்டையும் முன்வைக்கிற திட்டங்கள் எதுவுமில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.