உள்ளூர் செய்திகள்

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் அருகே விற்ற தரமற்ற உணவு பொட்டலங்கள் பறிமுதல்

Published On 2024-08-07 04:30 GMT   |   Update On 2024-08-07 04:30 GMT
  • உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்.
  • 100-க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் பறிமுதல்.

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலம் காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பிரசத்தி பெற்றது. சனி கிரக பரிகாரஸ்தலம் என்பதால், இக்கோவிலுக்கு புதுச்சேரி தமிழகம் மட்டுமின்றி பல மாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் இங்கு வருகின்றனர்.

பரிகாரம் செய்ய வரும் பக்தர்கள் நளன் குளத்தில் எண்ணெய் தேய்த்து நீராடி, விநாயகரை வழிப்பட்டு, ஏழை,எளிய மற்றும் யாசகம் கேட்போருக்கு அன்ன தானம் வழங்குவது வழக்கம்.

பக்தர்களின் பரிகாரத்திற்காக நளன் குளம் மற்றும் கோவில் சுற்றி ஏராளமான இடங்களில் அன்னதானம் செய்வதற்காக சிறிய உணவு பொட்டலங்கள் விற்பனை செய்கின்றனர்.

பக்தர்கள் உணவு பொட்டலங்களை வாங்கி யாசகம் கேட்போருக்கு அளிப்பர். அந்த பொட்டலங்களை அங்கு கடை வைத்திருக்கும் நபர்கள் குறைந்த விலைக்கு வாங்கி, மீண்டும் பக்தர்களுக்கே விற்பனை செய்கின்றனர்.

இதனால் நளன் குளத்தை சுற்றியுள்ள வியாபாரிகளுக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் நளன் குளத்தை சுற்றி பரிகார உணவு பொட்டலம் விற்பனை செய்ய கூடாது என கலெக்டர் தடை விதித்து உத்தரவிட்டார்.

ஆனாலும் தடையை மீறி நளன் குளம் அருகில் தர மற்ற உணவு பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் சென்றது.

இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையி லான குழுவினர் போலீ சாருடன், நளன் குளம் பகுதியில் ஆய்வு மேற் கொண்டனர்.

அப்போது, நளன் குளம் சுற்றி தடை செய்யப்பட்ட பகுதியில் தரமற்ற பரிகார உணவு பொட்டலம் விற்பனை செய்த 8 பேரிடம் இருந்து எள், தயிர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.

அப்போது, பரிகார உணவு பொட்டலம் விற்பனை செய்த பெண், உணவு பாதுகாப்பு அதிகாரியுடன் கடும் வாக்குவாதம் செய்தார். போலீசார் தலையி்ட்டு சமாதானம் செய்தனர்.

இதுதொடர்பாக 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Tags:    

Similar News