உள்ளூர் செய்திகள்

ஒற்றைச் சாளர முறை தொடர்பான கருத்தரங்கு

Published On 2023-02-14 09:27 GMT   |   Update On 2023-02-14 09:27 GMT
  • ஒற்றை சாளர முறை தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.
  • குண்டூசி முதல் விமான உதிரி பாகங்கள் வரை தயார் செய்யப்படுகிறது.

ஓசூர்,

ஓசூரில், வழிகாட்டி தமிழ்நாடு மற்றும் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், ஒற்றை சாளர முறை தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.

ஓசூர் மூக்கண்டபள்ளி பகுதியில் உள்ள ஓட்டல் ஹில்ஸ் கூட்டரங்கில் நடந்த கருத்தரங்கினை, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், தொடங்கி வைத்து பேசியதாவது: -

முன்னேறி வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 110 பெருநிறுவனங்கள், ஏராளமான சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் உள்ளன. இந்த நிறுவனங்களில் குண்டூசி முதல் விமான உதிரி பாகங்கள் வரை தயார் செய்யப்படுகிறது.

மேலும், கிரானைட் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களான மா, காய்கறிகள், கொய்மலர்கள் போன்ற ஏற்றுமதி செய்யக்கூடிய மலர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி 14 - ஆம் தேதி, காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு ரூ 4 கோடி முதல் 5 கோடி வரை ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.மோட்டார் வாகன உதிரி பாகங்கள் மற்றும் விவசாயம் சார்ந்த உற்பத்தி பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில், 15 சதவீதம் இந்த மாவட்டத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஒற்றைச் சாளர முறையில் உணவு பாதுகாப்பு மருத்துவம், தீயணைப்பு, நகர கட்டமைப்பு, மின்சார உற்பத்தி, வேளாண்மை சார்ந்த தொழில்கள் குறித்து வரப்பெற்ற 367 மனுக்களில் 317 மனுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு, தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சாலை, போக்குவரத்து, மின்சாரம், குடிதண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை தங்குதடையின்றி வழங்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆகவே, தொழில் முனைவோர்கள் அரசின் வழிகாட்டுதலின்படி தொழில் தொடங்கி, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் தீபக் ஜேக்கப் கருத்தரங்கில் பேசினார். 

Tags:    

Similar News