மாநில அளவில் சிறப்பிடம்- கபடி வீராங்கனைகளுக்கு ஆலங்குளத்தில் உற்சாக வரவேற்பு
- 17 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் நல்லூர் மேற்கு நெல்லை மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2-வது இடம் பிடித்தனர்.
- சிறப்பிடம் பெற்ற மாணவிகளை, பள்ளித் தலைமை ஆசிரியை உள்ளிட்டோர் பாராட்டினர்.
ஆலங்குளம்:
குடியரசு தினவிழா குழு போட்டிகள் அண்மையில் தருமபுரியில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், 17 வயதுக்குட் பட்டோருக்கான பெண்கள் பிரிவில், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் மேற்கு நெல்லை மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2-வது இடம் பிடித்தனர்.
இதே போன்று, 32-வது தேசிய சப்-ஜுனியர் கபடிப் போட்டியில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த தமிழக அணியில், இப்பள்ளி மாணவியும், காளத்திமடம் தென்றல் அணியின் வீராங்கனையுமான ரோபோ அஜி மாய்ஷா இடம்பிடித்திருந்தார்.
போட்டிகள் நிறைவு பெற்றதையடுத்து, இந்த மாணவிகள் ஊருக்கு திரும்பினர். அப்போது ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது, போட்டியில் சிறப்பிடம் பெற்ற அம்மாணவிகளுக்கு ஆலங்குளம் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளித்து, பேரூராட்சி துணைத் தலைவர் எஸ்.டி.ஜாண்ரவி, பரணி சில்க்ஸ், ஆர்த்தி ஜவுளி ரெடிமேட் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் பொன்னாடை அணிவித்து, பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.
சிறப்பிடம் பெற்ற இம் மாணவிகளை, பள்ளித் தலைமை ஆசிரியை வசந்தி ஜான்சிராணி, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், காளத்திமடம் தென்றல் அணியின் தலைவர் செல்வகுமார், செயலாளர் உதயசூரியன், மேலாளர் கருணாகரன், தலைமை பயிற்சியாளர் ஆசீர்ராஜா, பயிற்சியாளர்கள் மணி டேவிட், ஸ்டீபன், கரிகாலன் உள்ளிட்ட முன்னாள் கபடி வீரர்கள் பாராட்டினர்.