கம்பம் அருகே செல்போன், நகை திருடியதாக வாலிபர்களை தாக்கிய கும்பல்
- கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின், செல்போன், ரூ.1200 பணம் ஆகியவை திருடுபோனது.
- திருடிய நகை, பணத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டினர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் 7வது வார்டு சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜபிரபு (வயது37). இவர் சம்பவத்தன்று சுருளிப்பட்டி ரோட்டில் உள்ள ஒரு டீக்கடை முன்பு தனது காரில் அமர்ந்து நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் தூங்கி விட்டார். மீண்டும் எழுந்து பார்த்தபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின், செல்போன், ரூ.1200 பணம் ஆகியவை திருடுபோனது.
அப்போது அங்கே நின்றுகொண்டிருந்த சுருளிப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்த சதீஷ் (32), விஜய் ஆகியோரிடம் இது குறித்து கேட்டார். அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறினர். இருந்தபோதும் அவர்கள்தான் நகை, பணத்தை திருடி இருக்ககூடும் என்று சந்தேகம் அடைந்த ராஜபிரபு, அவரது நண்பர்கள் சசி, ஜெகதீஷ்குமார், நிவேக், கல்யாணி, சந்தானம், ஹரீஷ், வெற்றி ஆகியோர் சதீஷ், விஜயை காரில் அழைத்துக் கொண்டு கடுமையாக தாக்கி நகை, பணத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டினர்.
படுகாயம் அடைந்த அவர்கள் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.