உள்ளூர் செய்திகள்

ஊட்டி அருகே மாணவியை கற்பழித்து கொன்ற வாலிபர் வி.ஏ.ஓ. முன்னிலையில் சரண் அடைந்தார்

Published On 2023-04-26 06:41 GMT   |   Update On 2023-04-26 09:42 GMT
  • தலைமறைவாக இருந்த ரஜ்னேஷ் குட்டனை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் அருள், சுசீலா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
  • நஞ்சநாடு கிராம நிர்வாக அதிகாரி பிரியா முன்னிலையில் ரஜ்னேஷ் குட்டன் சரண் அடைந்தார்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி பைக்காரா அருகே உள்ள தோடர் பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் ஊட்டியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

தற்போது மாணவிக்கு இறுதித்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் காலை மாணவி வழக்கம் போல பள்ளிக்கு சென்றார்.

ஆனால் மாலை வெகுநேரமாகியும் மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை பெற்றோர் தேடி வந்த நிலையில் அங்கர்போர்டு அருகே உள்ள புதருக்குள் மாயமான மாணவி பலத்த காயங்களுடன் அலங்கோலமான நிலையில் பிணமாக கிடந்தார்.

பைக்காரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாணவி உடல் அருகே கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த காரில் மாணவி கடத்தப்பட்டு கற்பழித்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

மாணவியை கற்பழித்து கொன்றது யார்? இதில் ஒரு நபர் ஈடுபட்டரா? அல்லது கும்பலாக ஈடுபட்டனரா என்பது குறித்து விசாரணையை முடுக்கி விட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், மாணவியை கடத்திச் சென்ற கார், கக்கோடுமந்து என்ற இடத்தைச் சேர்ந்த ரஜ்னேஷ் குட்டன் (வயது25) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

மேலும் இவர் தான் மாணவியை காரில் கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ, கடத்தல், கொலை உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகி இருந்தார்.

தலைமறைவாக இருந்த ரஜ்னேஷ் குட்டனை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் அருள், சுசீலா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வாலிபரை தேடி வந்தனர். இந்தநிலையில் நஞ்சநாடு கிராம நிர்வாக அதிகாரி பிரியா முன்னிலையில் ரஜ்னேஷ் குட்டன் சரண் அடைந்தார். அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மாணவி கொலையில் இவரை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News