உள்ளூர் செய்திகள்

இடிகரை அருகே பஸ் வசதி இல்லாததால் பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்கள்

Published On 2023-04-27 09:37 GMT   |   Update On 2023-04-27 09:37 GMT
  • சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்க வருகின்றனர்
  • பஸ் வரவழைத்தால் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

கவுண்டம்பாளையம்,

கோவை துடியலூர் அடுத்துள்ள இடிகரை பேரூராட்சியில் இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இதில் இடிகரை பேரூராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் மற்றும் அப்துல்கலாம் நகர் பகுதியில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்க வருகின்றனர்.

அதுவும் அத்திப்பா ளையம் தொடக்கப்பள்ளி, இடிகரை தொடக்கப்பள்ளி, இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளியில் அவர்கள் படிக்க செல்கிறார்கள். இந்த நிலையில் இங்கிருந்து படிக்க வரும் மாணவ, மாணவிகள் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை நடத்து வந்து அங்கு நிற்கும் அரசு பஸ்சில் ஏறி பள்ளிக்கு வருகின்றனர்.

மேலும் பெற்றோர்கள் கூலி வேலைக்கு சென்று வருவதால் அவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர இயலவில்லை. இதனால் சில குழந்தைகள் பள்ளிக்கு வராமல் நின்று விடுகிறார்கள்.

மேலும் பள்ளி குழந்தைகள் நடந்து வரும் பகுதி காட்டு பகுதியாக உள்ளது.

ஏற்கனவே இதுகுறித்து கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு இடிகரை பள்ளி சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் காலை நேரத்தில் அரசு பஸ் ஒன்று ரங்கநாதர் பாலிடெக்னிக் அருகே வந்து நின்று செல்கிறது. அதுவும் சுமார் 20 நிமிடம் நிற்பதால் அந்த பஸ் எம்.ஜி.ஆர் நகருக்கு வரவழைத்தால் பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் பயன் அடைவார்கள். மேலும் இது மாணவர் சேர்க்கையையும் அதிகரிக்க உதவும் என மாணவ, மாணவிகள், பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News