உள்ளூர் செய்திகள்

பூதப்பாண்டி அருகே சொத்து தகராறில் தாய் வெட்டிக்கொலை

Published On 2023-05-24 04:47 GMT   |   Update On 2023-05-24 04:47 GMT
  • பிணமாக கிடந்த அமலோற்பவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • சொத்து பிரச்சினையில் தாய், தந்தையரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில்:

பூதப்பாண்டி அருகே திட்டுவிளை பெருங்கடை தெரு பகுதியை சேர்ந்தவர் பவுல். இவரது மனைவி அமலோற்பவம் (வயது 68). இவர்களுக்கு மோகன்தாஸ் (50) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி விட்டது. மோகன்தாஸ் மனைவி குழந்தைகளுடன் வீட்டின் மாடியில் வசித்து வருகிறார்.

பவுல், அமலோற்பவம் இருவரும் வீட்டின் கீழ் பகுதியில் வசித்து வந்தனர். தந்தை-மகனுக்கு இடையே சொத்து பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மோகன்தாஸ் நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். வீட்டின் கீழ் பகுதியில் தாய்-தந்தை வசித்து வந்த வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த பவுல், அமலோற்பவத்திடம் தனக்கு சொத்து தருமாறு கேட்டு தகராறு செய்தார்.

அப்போது அவர்கள் மோகன்தாஸிற்கு சொத்து கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மோகன்தாஸ், தந்தை பவுல், தாய் அமலோற்பவம் இருவரையும் சரமாரியாக வெட்டினார். இதில் அமலோற்பவத்திற்கு கழுத்து, முதுகு பகுதியில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பவுலுக்கு முதுகு, கழுத்து, தோள்பட்டை பகுதியில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றிய தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

பிணமாக கிடந்த அமலோற்பவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாயாரை வெட்டி கொலை செய்த மோகன்தாஸ் பூதப்பாண்டி போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரிடம் அவர் கூறியதாவது:-

நான் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இது எனது தந்தைக்கு பிடிக்கவில்லை. இதனால் அவரது சொத்துக்களை எனக்கு தர மறுத்தார். எனது சகோதரிகளுக்கு சொத்துக்களை கொடுத்தார். மேலும் சொத்துக்களை விற்று வந்த பணத்தையும் எனக்கு தரவில்லை.

கடந்த 10-ந்தேதி சிறமடம் பகுதியில் 5 ஏக்கர் சொத்தை ரூ.30 லட்சத்திற்கு விற்பனை செய்தார். அதில் கிடைத்த ரூ.15 லட்சம் பணத்தை எனது சகோதரிகளுக்கு கொடுத்தார். எனக்கு பணம் தராதது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எனது தாய், தந்தையிடம் எனக்கும் சொத்தில் பங்கு தரவேண்டும். சொத்து விற்பனை செய்து வந்த பணத்தை எனக்கு தர வேண்டும் என்று கேட்டேன்.

ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட தகராறில் அவர்களை அரிவாளால் வெட்டினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் தொடர்ந்து மோகன்தாசிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். சொத்து பிரச்சினையில் தாய், தந்தையரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News